Tuesday, 11 March 2025

மெய்நிகர் நாணயம் - Cryptocurrency

கற்காலம் முதற்கொண்டு தற்காலம் வரை உலகில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இருபத்தோராம் நூற்றாண்டின் விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியினால் மனிதன் அபரிமிதமான சாதனைகளை படைத்து வருகிறான். அதனால் மரபார்ந்த விடயங்கள் மறைந்து நவீனங்களில் நாம் மிதந்து கொண்டு இருக்கிறோம். இதனாலேதான் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என நன்னூலார் குறிப்பிடுகிறார். 


இதற்கிணங்க இன்றைய உலகின் பொருளாதார வளர்ச்சியில் பேசுபொருளாக மாறியிருப்பது மெய்நிகர் பணம் (Cryptocurrency) ஆகும். பண்ட மாற்றில் தொடங்கிய பொருளாதர தொடர்பு இன்று மெய்நிகர் பணமாக மாறி நிற்கிறது. எனவே நாமும் இது பற்றி அறிந்திருப்பது காலத்தின் தேவையே. இந்த மெய்நிகர் பணத்தை கணனிக் காசு (Computer money), நுண்காசு (Micro money), எண்ணிம நாணயம் (Micro money), இணையக் காசு (Virtual money), மின்னணு பணம், எண்ம நாணயம், குறியீட்டு நாணயம், டிஜிட்டல் காசு, கிரிப்டோ நாணயம் எனும் பல பெயர்களை கொண்டு அழைக்கிறார்கள்.


பொதுவாக நாம் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ வாங்கும்போது, அதற்கான பணத்தை நம் கையில் இருக்கும் ரூபாய் தாள்களாக கொடுப்போம். மெய்நிகர் பணமும் அதே போல தான். இதனை பயன்படுத்தி ஒரு பொருளையோ, சேவையையோ வாங்க முடியும். ஆனால் அவை தொட்டு பார்க்க முடியாத எண்ணிம நாணய வடிவில் இருக்கும். ஒரு நாட்டின் நாணயத்தாள் அந்த நாட்டில் மட்டுமே செல்லத்தக்கது ஆகும். ஆனால் மெய்நிகர் நாணயம் உலகம் முழுவதும் செல்லத்தக்கது ஆகும். ஒவ்வொரு நாட்டின் பணத்தையும் அந்த நாட்டின் மத்திய வங்கி கட்டுப்படுத்துகிறது. ஆனால் மெய்நிகர் நாணயத்தை எந்த ஒரு வங்கியோ, நாடோ கட்டுப்படுத்த முடியாது. ஒரு இணைய இணைப்பு இருந்தாலே மெய்நிகர் நாணயப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.


இந்த மெய்நிகர் நாணயங்கள் வழக்கமான காகிதம், அரசு முத்திரை, உலோகம், போன்றவை இல்லாமல் எண்ணிம முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முகவரியில் சேமித்து வைக்கப்படுகின்றன. எண்ணிம பணப்பையில் உள்ள நாணயங்களை மற்றொருவருக்கு அனுப்ப குறிச்சொல் (Code) கொடுக்கப்பட வேண்டும். பணப்பையில் மற்றொருவரிடம் இருந்து நாணயங்களை வாங்க முகவரியை அனுப்ப வேண்டும். ஒருவேளை நாம்  குறிச்சொல்லை மறந்து விட்டால் நாணயங்களை ஏதும் செய்ய இயலாது.


2009 ஆம் ஆண்டு தான் முதல் மெய்நிகர் நாணயமான பிட்கொயின் (Bitcoin) உருவாக்கப்பட்டது. பிறகு ஈத்திரியம் (Ethereum),  லைட் கொயின் (LiteCoin), டாக் கொயின் (DogeCoin), FTX Token போன்ற ஆயிரக்கணக்கான மெய்நிகர் நாணயங்கள் வந்தன. இன்றைய நாளில் 10,000 க்கும் மேற்பட்ட மெய்நிகர் நாணயங்கள் உள்ளன. அவ்வாறு பயன்படுத்தப்படும் மெய்நிகர் நாணயங்களுக்கு சர்வதேச குறியீடுகளும் காணப்படுகின்றன. எனவே அவற்றுள் மிக முக்கியமான மெய்நிகர் நாணயங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் நாம் அறிந்திருப்பது அவசியமான ஒன்றாகும்.


எனவே அவற்றுள்

  1.  பிட்காயின்  - BTC           2. ஈத்தரீயம்   - ETH

  3.  ரிப்பிள்    - XRP           4. பிட்காயின் கேஷ் - BCH

  5.  ஈஓஎஸ்   - EOS          6. ஸ்டெல்லர்  - XLM

  7.  லைட்காயின் - LTC         8. கார்டோனா - ADA

  9.  டீதர்     - USDT          10. மோனீரா   -  XMR


மெய்நிகர் நாணயங்களில் முதன்மையான பிட்காயின் (Bitcoin) (எண்ணிம நாணயக் குறியீடு: BTC -  ฿) அல்லது நுண்காசு என்பது சத்தோசி நகமோட்டோ எனும் புனைப்பெயரைக் கொண்ட அறியப்படாத ஒருவரால் உருவாக்கப்பட்ட ஒரு மெய்நிகர் நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது. இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் (open-source software) இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. பிட்காயின் என்பது தொடரேடு (அல்லது கட்டச்சங்கிலி - blockchain) என்று அழைக்கப் படும் ஒரு வகை கணினி தொழில் நுட்ப முறையில் இயங்குகிறது.


கட்டச்சங்கிலி (blockchain  - பிளாக்செயின்) அல்லது தொடரேடு என்பது பல ஏடுகளால் அல்லது கட்டங்களால் ஆனது. தகவல்கள் ஒவ்வொரு ஏட்டிலும் (கட்டத்திலும்) எழுதப்பட்டு, அவை சங்கிலிபோல இணைக்கப் பட்டிருக்கும்.  சங்கிலி இணைப்பு போன்ற இந்த அமைப்பில் தேதி, நேரம், போன்றவையும் குறியாக்க வடிவில் சேமித்து வைக்கப்படும். ஏதாவதொரு தகவலை அழிப்பதோ, அல்லது மாற்றுவதோ இதில் கடினமானது. ஒவ்வொரு தகவல் பரிமாற்றமும் கணுக்கள் (network nodes) மூலமாகவும், பராமரிப்பாளர்கள் வாயிலாகவும் சரிபார்க்கப்படும்.


எடுத்துக்காட்டாக, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இடத்தை விற்கிறோம் தருகிறோம் என்றால், ஒருமுறை விற்ற பின், நம்முடைய கணக்கிலிருந்து அந்த இடம் சென்றுவிடும். இதனை கணுக்களும், பராமரிப்பாளர்களும் உறுதி செய்வார்கள். இடம் யாருக்கு சொந்தம், எப்போது பரிமாற்றம் நடந்தது, போன்றவற்றை அதிநவீன கணினி மூலமாக, கணித கோட்பாடுகளையும், சமன்பாடுகளையும் சமாளித்து விடையாக அந்த உறுதி அமையும். இவ்வாறு பரிமாற்றம் உறுதிசெய்த பின், மறுமுறை அதே இடத்தை வேறொருவருக்குக் கொடுக்க இயலாது.


பிட்காயினை (பொது வழக்கில் உள்ள டாலர், ரூபாய் போல) வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம்; பொருள்கள் வாங்கலாம்; மற்றும் சேமித்து வைக்கலாம். பொது வழக்கில் உள்ள பணம் ஒரு மத்திய வங்கியால் (Central Bank) கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றது. ஆனால், பிட்காயின் என்ற இந்த கணினிக் காசு எந்த வங்கியாலும் மேற்பார்வை இடப்படுவது இல்லை கட்டுப் படுத்தப்படுவதும் இல்லை. மாறாக, கட்டச்சங்கிலி (blockchain) என்ற மென்பொருளால் ஆன வரவுப் பதிவேட்டில் (ledger) சேமிக்கப் பட்டு, பாதுகாக்கப் படுகின்றது. இது இணையர் வலையம் ( P2P network) என்ற கணினி வலையத்தில் (computer network) செயற்படுத்தப் பட்டு, அதில் உள்ள பல இணையர்களால் மேற்பார்வை இடப்பட்டு, இயங்கும் மென் பொருளாகும். 


கட்டச்சங்கிலியில் உள்ள கட்டங்களை உருவாக்க சுரங்கமர்கள் ((miners) என்பவர்கள் அமர்த்தப் படுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்தை உருவாக்க கூலி கொடுக்க வேண்டும். அந்தக் கூலியைக் கொடுப்பதற்காகவே பிட்காயின் முதன்முதலில் உருவாக்கப் பட்டது. அந்த பிட்காயினை வைத்துக் கொண்டு, டாலர், ரூபாய், போன்ற பணத்தை வாங்கலாம்; மற்ற பொருட்களையும் வாங்கலாம். பிட்காயின் நாளடைவில் பலராலும் அறியப்பட்ட பிறகு, பலரும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge, இங்கிலாந்து) மேற்கொண்ட ஆய்வின் படி, 2017 இல் 2.9 மில்லியன் முதல் 5.8 மில்லியன் வரையிலான குறியீட்டு நாணயப் பணப்பைகள் (cryptocurrency wallet) பயன்படுத்தப் பட்டன என்றும், அவற்றில் பெரும்பான்மையானவை பிட்காயினைப் பயன்படுத்தியவை என்றும் தெரிய வந்தது. 


பிட்காயினால் பல சிக்கல்கள் உருவாகி இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, பிட்காயினை வைத்து நடத்தப் படும் சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிமாற்றங்கள், பிட்காயின் விலை நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது, மற்றும் பிட்காயின் களவுகள் ஆகியன பிட்காயினுக்கு எதிராக வைக்கப் படும் குற்றச் சாட்டுகளாகும். மேலும், பிட்காயின் என்பது ஒரு வெறும் பொருளாதாரக் குமிழ் (economic bubble) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது. ஒரு பொருளின் உண்மை விலையை விட அதிகமான விலையை ஏற்றி மதிப்பிடுவதையே பொருளாதார குமிழ் என அழைக்கப்படுகிறது. இருந்தாலும், பிட்காயினில் பலர் முதலீடு செய்துள்ளனர் என்பதும்  அதனை அமெரிக்க அரசு எண்மான தங்கம் ( Digital Gold) என அறிவித்து அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவென பிட்காயின்களை சேமிக்கத்தொடங்கி இருப்பதும் உண்மையான ஒன்றாகும். மெய்நிகர்நாணயத்தை (cryptocurrency ) சர்வதேச அரசுகள் அங்கீகரித்து வரும் வரிசையில் இலஙங்கையும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


எனவே பூமிப்பந்தில் அனுதினமும் புத்தம் புது விடயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றுள் எவை சிறந்தவை?, எவை நமது வாழ்விற்கு உகந்தவை?, எவை தீயவை?, எவை அபாயகரமானவை? என கண்டறிந்து அன்னம் போல அனுகூலங்களை அனுபவிப்போம், பிரதிகூலங்களை புறமொதுக்குவோம்.




Sunday, 24 November 2024

மகிழும் நெஞ்சம் கவலும்

குரங்கோடி குலையுலுப்ப
கொண்டாடி மகிழ்கிறது நெஞ்சம்
கன்றோடி காலிடறி கதறுகையில்
கலங்கியழுகிறது நெஞ்சம்

கூரையேறி மயிலாடுகையில்
கொண்டாடி மகிழ்கிறது நெஞ்சம்
கோழிக் குஞ்சோடி குழியில் வீழ்கையில்
கலங்கி அழுகிறது நெஞ்சம்

சிறுபட்சி சிறகடித்து நீராடிப் பறக்கையிலே
கொண்டாடி மகிழ்கிறது நெஞ்சம்
வாத்தோடி வலையில் சிக்கி வதைபடுகையில்
கலங்கி அழுகிறது நெஞ்சம்

காற்றசைவில் விளாங்கனி வீழ்கையில்
கொண்டாடி மகிழ்கிறது நெஞ்சம்
காற்றசைவில் குருவிக் கூடுடைகையில்
கலங்கி அழுகிறது நெஞ்சம்

முயலோடிப் புதரில் புகயிலே
கொண்டாடி மகிழ்கிறது நெஞ்சம்
புதரிருந்து புடையனோடி வருகையிலே
கலங்கி அழுகிறது நெஞ்சம்

பூவாடி பனி வடிகையில்
கொண்டாடி மகிழ்கிறது நெஞ்சம்
வெயில் கூடி பூவாடுகையில்
கலங்கி அழுகிறது நெஞ்சம்





பொங்கியெழு

 කුසට සා ගිනි

හදට සෝ ගිනි


ඉනට වැරහැලි

කැබලි එල්ලා 

සතුට සැනසුම

අහිමි කරලු


අඳුර දින කාලය ගිහිල්ලා 


නොසිට මැරි මැරි

සතුරු පා යට


වකුටු වී අතපය හකුල්ලා


නැගිටපල්ලා නැගිටපල්ලා


නුඹලාගේ වාරය එවිල්ලා


 - රෝහණ විජේවීර -


‐‐------------------------------------------------


மொழியாக்கம்  - 01


வயிறு பசிக்கிறது 

இதயம் பொசுக்குகிறது 


இடுப்பில் அங்கி

கிழிந்து தொங்கி 

நிம்மதியும் மகிழ்ச்சியும் 

அழிந்து பொசுங்கி 


இருண்ட நாட்கள் 

விரண்டு ஓடின


காலும் கையும் மடக்கி 

முடமாக்கி - எதிரியின்

காலடியில்  செத்து செத்து 

வீழாமல் 


பொங்கியெழு பொங்கியெழு 

உங்களது காலமிது

வந்ததிப்பொழுது


   - Ahnaf Jazeem -


---------------------------------------------------


 மொழியாக்கம் - 02


வயிற்றுக்கு பசிப்பிணி

நெஞ்சுக்கு அக்கினி


இடுப்புக்கு தொங்கும்

கிழிந்த துணி

மகிழ்ச்சி நிம்மதி

 அழிந்து ஒழிந்த


இருண்ட நாட்கள்

மிரண்டு போயின


குனிந்து பணிந்து

எதிரியின் பாதத்தில்

சுருண்டு விழுந்து

செத்து செத்து போகாமல் 


குமுறியெழு திமிறியெழு 

வந்தது உங்களது தருணமிது



கவலைக் கொழுந்தனல்

சிறையில் சிதைபடுவானோ?

வதைபடுவானோ? சிலரால்

உதைபடுவானோ? மனதளவில்

உடைபடுவானோ? தன்பிள்ளை 

என்றே பெற்ற வயிற்றில் தீ

பற்றி எரிய அம்மையப்பர்

அன்றாடம் அழுதிருப்பார்


குற்றமற்ற தன் கணவன்

குற்றுயிராய் கிடப்பாரோ? 

எனக்குழறியழும் குடும்பத்தார்


ஏங்கித்தவித்து எப்போது

காண்போம் என எதிர்பாரத்து 

நாளை காண்போம் என 

தேதி குறித்து - எல்லாப் 

பொருளும் வாங்கிக் குவித்து

இரவெல்லாம் விழித்து

இரணங்கள் தயாரித்து


கால்வலி மேல்வலி தோள்வலி

எதுவும் பாராமால் பேரூந்திலிருந்து

பலநூறு மைல் கடந்து -கொடூரக் 

கிருமி கொரோனாவையும் மறந்து


சிறையிருக்கும் தம்மகனை காண

தாய் தந்தையும் தங்கணவனைக் 

காண பிள்ளை மனைவியும் 

வந்திருந்து வரிசையில் காத்திருந்து

காணும் அவாவில் முகம் பூத்திருந்து 

 


நிமிடங்கள் சிலவற்றுள் கண்டுவிடுவோம்

ஆனந்தம் கொண்டுவிடுவோம்

ஏனக் காவலவரிடம் கேட்டறிந்து 

காத்திருந்த கடைசி நொடியில்

காட்டாமல் விரட்டிவிட்டானே!

ஏமார்ந்தோர் நெஞ்சில் துயர்த்

தீயை மூட்டிவிட்டானே!


புத்தி தெளிந்திருக்க - உடல் 

தெம்போடிருக்க - உயிர்

கூட்டில் சேர்ந்திருக்க 

விழியிரண்டும் நெஞ்சை 

கண்டிருக்க - நெஞ்சு கிழித்து

நார்நாராய் கிழித்தறுப்பதாய்

துயருற்றிருப்பார் எம்வீட்டார்


மீண்டும் எம்மை கண்டாலே

ஒழிய மூண்டெரியும் கவலைக்

கொழுந்தனல் அணையாது.


2020.07.17

சிறை

ஆறாம் மாடி

கொழும்பு


சிறுவர் மலர்

மலரிதழில் மகரந்த இழையில்

மதுவருந்தும் பட்டாம்பூச்சி

நாம் தொட்டவுடன்

எம் விரல் பட்டவுடன்

அந்தரத்தில் வட்டடமடிக்குமே!


அதுபோல பள்ளிப்பூங்காவில்

வகுப்பெனும் மலரில்

அறிவெனும் மதுவருந்தும்

பட்டாம் பூச்சிகள் எம்மை

விளையாட்டு தொட்டவுடன்

விழாவெனும் விரல் பட்டவுடன்

ஆனந்த அந்தரத்தில்

வட்டமடிப்போமே!


சிறுவர்தம் சிரிப்பொலி

இல்லாத இடங்கள்

என்றும் சிறைக்கூடங்களே!


சிறுவர்தம் செருப்பொலி

இல்லாத இடங்கள் 

என்றும் மயானக்காடுகளே!


சிறுவர்தம் சிறப்பறிந்த வள்ளுவன்

சிறுவர்தம் சிரிப்பொலிதனை கேளுங்கள்

செயற்கையாய் செய்த இன்னிசைகள்

எத்திசையில் ஓடி ஒளிக்கும் என்றறவீர்கள்

எனக்கூறி குறள் செய்தான்


சிறாருக்கு சீரிரக்கம் 

காட்டாதவர் யாரும்

என்னைச் சாராதவர்

என்றே அண்ணலார்

எச்சரித்தார் - அன்பை

அவருதட்டில் உச்சரித்தார்


யாவரும் எம்மீது அன்பு கொள்ள

சிறுவர் நாம் சிறாராய் இருப்போம்

விழுமியக்கல்வியால் சிறப்போம்

முனிவு காட்டாது கனிவு காட்டும்

மூத்தோரை மதிப்போம்

முழுவுலகின் இறைவனை துதிப்போம்


Sunday, 10 November 2024

அகோரப் பாசிசம்


பண்பாட்டை மண்போட்டு மூடிவிட்டு

விண்போற்றும் விஞ்ஞானம் தன்பாட்டில்

தறிகெட்டுப் போகுதே?


புண்பட்டட நெஞ்சில் புளிவிட்டு

வதைப்பது போல் கண்பட்ட

இடமெல்லாம் கல்விட்டெறிந்த

காலம் போய்


கண்டம்விட்டு கண்டம் பாயும் 

எறிகணைகளை விட்டெறியும் 

தியாலம் இதுவோ?


பயிர் காக்க சட்டம்

உயிர் போக்க திட்டம்

மயிர் வளர்க்க பாடத்திட்டம்

உயிர் தாக்க படைக் கோட்டம்


உரிமைகள் விருத்தி கண்ட 

விஞ்ஞான யுகமிங்கே!!

மாநாடுகளில் மட்டும் மனித உரிமை

உலக நாடுகளில் சடலவெளிகள்


அரங்குகளில் அடிப்படை உரிமை

ஆங்காங்கே அராஜகங்களின் ராஜாங்கம்

வட்ட மேசைகளில் வாழும் உரிமை

வன்புணர்வோருக்கே வட்டமுண்டு

இது என்ன கொடுமை?


பேச்சுரிமை வாக்குரிமையென

உரிமைப் பட்டடியல் 

வானுயரைத் தொடும் - ஆனாலும்

அடியாளும் தடியாலும் அடித்ததில்

சடலங்கள் வடிகாலில் விழும்


விலங்குகளை காக்ககெவன்றும்

குரங்குகளை பார்க்கவென்றும்

சடங்குகளை வளர்க்கவென்றும்

கனிமங்களை பாதுகாக்கவென்றும்

சட்டங்களும் சமவாயங்களும்

ஒழுங்குகளும் ஒப்பந்தங்களும்

ஓராயிரம் ஓராயிரம்


இவையெல்லாம் எளியவனை சுரண்ட 

வலியவன் விரித்த வலைகள்

சிற்றரசுகளை சூறையாட

வல்லரசுகள் வைத்த பொறிகள்


மக்களைக் காட்டி மக்கள்

பெயரால் மக்களைக் கொல்லும்

மகா சூட்சுமம் இதன் மாற்றுப்

பெயரோ யாவரும் புகழும் - ஜனநாயகம்


காரணம் கேட்டால் 

மனிதனோர் அரசியல் பிராணி

காரணம் கண்டறிந்தால்

மனிதனோர் அதிகாரப் பிசாசு

ஆதலால் அடிக்கடி அரங்கேறுகிறது

அகோரப் பாசிசம் 


காஸா தீக்கிடங்கும் பலஸ்தீன

பெரு மயானமும் ஐநாவின்

ஈமக்ககிரியைகளாம் 


The Gaza hellfire and palestine cemetery 

is  funeral of United Nations organization


2.12 மு.ப 2024.04.21 


தியாலம் - நேரம்


Saturday, 1 April 2023

அர்ரஹ்மான் - அருளாளன்

        

அலகிலா அருளாளன் 

அவனல்லோ திருமறைதனை

கற்பித்தான் - மானுடனை 

அவனேதான் சிரஷ்டித்தான்

விளக்கமதை விளக்கித்தான்

மனிதனுக்கு அறிவித்தான்


நிலவும் ஞாயிறும் 

நீந்தத்தான் எல்லை நிர்ணயித்தான்

தருவும் உடுவும் அவனை

தலைவணங்கத்தான் பணித்தான்


வானத்தை உயரத்திலமைத்தான்

நீதிக்காய் தராசைச்சரிநிகராய் வைத்தான்

நிறுவையில் நீதிதவறாது நீங்களிருக்க

ஏகன் தராசை சமைத்தான்

நிறுத்தால் குறைத்தன்றி நிறைத்தே

கொடுத்திடுங்கள் என்றே பணித்தான்


உயிர்களுக்கென நிலத்தை விரித்தான்

கனிகளையும் பாளைதள்ளும் 

பேரீத்தையும் கொடுத்தான்

கோதுமூடிய தானியமும் கூடவே

பயிர்களில் பரிமளத்தையும் பொதித்தான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?




தட்டச் சத்தமெழும்

சுட்ட களியால் 

மானுடனையவன் படைத்தான்

தீயின் கொழுந்தால் இன்னும்

ஜின்னையவன் படைத்தான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


கிழக்கிரண்டும் மேற்கிரண்டும்

அவனுக்கென எடுத்தான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?



கடலிரண்டை ஒன்றோடொன்று

தொடுத்தான் - ஆனாலுமவை

இணையாது திரைகொண்டு தடுத்தான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


ஆழிக்கடலில் அழகுக்காய்

முத்தும் பவளமும் தோன்ற விதித்தான் 

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


நகரும் வரைகளாய் சாகரத்தில்

நகரும் நாவாய்களையும் தனக்கென

நாயனவன் எடுத்தான் 

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?



உலகோரை ஒட்டுமொத்தமாய் 

அழிப்பான் - அன்று கண்ணியமும் 

அசுரவாற்றலும் கொண்ட 

ஈசனவன் நிலைப்பான் 

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


ஆகாயம் பூமி 

அதிலிரண்டிலுமுள்ளோர்

அவனையே இறைஞ்சுவர்

அவனே காரியத்தில்

அனுதினமும் இருப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


உங்களிருவர் கணக்கையும் பார்க்க 

விரைந்து அவகாசம் எடுப்பானவன்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


மனித ஜின் வர்க்கமே!

முடிந்தால் பிரபஞ்ச எல்லைதனை

கடந்து பாரும் அவனதிகாரமன்றி

கடப்பதையவன் தடுத்தான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


நாதியற்று நரகில் நீங்களிருக்க

நெருப்பும் புகையும் அதன்னாக்கும் 

உங்கள்மேல் சேர்ப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


நாளை மறுமை வரும்போது

வானைச் செந்நிறத்தில் நெய்

போலாகும்படி பிளப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


மனித ஜின்களிடம் நாளை

மறுமையில் தங்கள் பாபம்பற்றி

கேள்வியேதும் கேட்டிடமாட்டான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


முகச்சாடையிலே குற்றவாளிகள்

அறியப்படுவர் - கால்களிலும் 

முன்னெற்றி மயிர்களிலும் பிடித்து

எறியப்படுவர்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


நீங்கள் பொய்யாக்கிய நரகம் 

இதுவென்று குற்றவாளிகளிடம்

சொல்லுவிப்பான் 

செந்தீக்கும் வெந்நீருக்குமிடையே 

அவர்களை அலைய வைப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


மறுமைதனை நினைத்து

இறைவனை பயந்தவனுக்கு

சுவனமிரண்டை பரிசளிப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


அச்சுவனமிரண்டிலும் கவைத்து

கிளைத்த  மரங்களை முளைப்பிப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


அச்சுவனமிரண்டிலும் 

ஓடுமிரண்டு ஊற்றமைப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


அச்சுவனமிரண்டிலும் 

கனிகளொவ்வன்றிலும் 

இருவகைகளைப் படைத்தான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


அச்சுவனமிரண்டிலும் 

பட்டுத்துணி பொருத்திய 

விரிப்பில் சாய்ந்திருக்க

பழங்களை பக்கத்தில்வர பணிப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


மனித ஜின் தொடவே தொடா

விழிப்பார்வை நிலத்திருந்து

விலகா அமரகன்னியரை 

அங்கு வைதத்திருப்பான் 

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?

  


அவ்வமர கன்னியரை வெண்முத்துச்

செம்பவளம் போலமைத்தான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


நன்மைக்கு நன்மையன்றி 

வேறென்ன கூலிதான் கொடுப்பான் 

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


அச்சுவனமிரண்டு மல்லாமலும்

இன்னுமிரண்டு சோலைச்சுவனம்

நாளை கொடுப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


அச்சோலைச் சுவனமிரண்டிற்கும்

நிறமோ கரும்பச்சை கொடுப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


அச்சோலை சுவனமிரண்டிலும்

சுனைகளிரண்டை பொங்கி

ஓட வைப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


பேரீச்சையும் மாதுளையும்

பழங்கள் வேறுபலவும்

அங்கு கொடுப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


வனப்புமிகு நற்குணமுள்ள

அமரகன்னியரை அங்கு

வைத்திருப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?



ஹ{ர் என்னும் அமரகன்னியரை

அங்கு கூடாரங்களில்

மறைத்திருப்பான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


அவ்வமர கன்னியரை 

மனித ஜின் தொடாமல்

மறைத்து வைத்தான்

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


இரத்தினப் பசுங்கம்பளங்களிலும் 

வனப்பொழுகும் விரிப்புகளிலும் 

அவ்வமர மங்கையரை 

சாய்ந்திருக்க வைத்தான் 

உங்களீசன் அருள்களில் நீங்களிருவரும் 

பொய்தானெனக் கண்டதெதைத்தான்?


அசுரவாற்றலும் அதியுயர்

சங்கையும் கொண்டிறைவன்

தன் பெயரில் பாக்கியம் கொண்டான்