Sunday, 24 November 2024

கவலைக் கொழுந்தனல்

சிறையில் சிதைபடுவானோ?

வதைபடுவானோ? சிலரால்

உதைபடுவானோ? மனதளவில்

உடைபடுவானோ? தன்பிள்ளை 

என்றே பெற்ற வயிற்றில் தீ

பற்றி எரிய அம்மையப்பர்

அன்றாடம் அழுதிருப்பார்


குற்றமற்ற தன் கணவன்

குற்றுயிராய் கிடப்பாரோ? 

எனக்குழறியழும் குடும்பத்தார்


ஏங்கித்தவித்து எப்போது

காண்போம் என எதிர்பாரத்து 

நாளை காண்போம் என 

தேதி குறித்து - எல்லாப் 

பொருளும் வாங்கிக் குவித்து

இரவெல்லாம் விழித்து

இரணங்கள் தயாரித்து


கால்வலி மேல்வலி தோள்வலி

எதுவும் பாராமால் பேரூந்திலிருந்து

பலநூறு மைல் கடந்து -கொடூரக் 

கிருமி கொரோனாவையும் மறந்து


சிறையிருக்கும் தம்மகனை காண

தாய் தந்தையும் தங்கணவனைக் 

காண பிள்ளை மனைவியும் 

வந்திருந்து வரிசையில் காத்திருந்து

காணும் அவாவில் முகம் பூத்திருந்து 

 


நிமிடங்கள் சிலவற்றுள் கண்டுவிடுவோம்

ஆனந்தம் கொண்டுவிடுவோம்

ஏனக் காவலவரிடம் கேட்டறிந்து 

காத்திருந்த கடைசி நொடியில்

காட்டாமல் விரட்டிவிட்டானே!

ஏமார்ந்தோர் நெஞ்சில் துயர்த்

தீயை மூட்டிவிட்டானே!


புத்தி தெளிந்திருக்க - உடல் 

தெம்போடிருக்க - உயிர்

கூட்டில் சேர்ந்திருக்க 

விழியிரண்டும் நெஞ்சை 

கண்டிருக்க - நெஞ்சு கிழித்து

நார்நாராய் கிழித்தறுப்பதாய்

துயருற்றிருப்பார் எம்வீட்டார்


மீண்டும் எம்மை கண்டாலே

ஒழிய மூண்டெரியும் கவலைக்

கொழுந்தனல் அணையாது.


2020.07.17

சிறை

ஆறாம் மாடி

கொழும்பு


No comments:

Post a Comment