Tuesday, 13 September 2022

பசுமை

 வனமும் மலையும் விழியில் விழுந்து

மனதில் பதியும் வேளை புளுங்கி

நொந்த நெஞ்சு புளகாங்கிதம்

கொள்ளுதே!


இதற்குள் மேகம் மழையாய் வந்து

நீரென காற்றில் கலந்துவிட்டால் 

சொல்லவா வேண்டும் நெஞ்சம் 

கொள்ளும் நிம்மதியை


வரண்ட பூமியில் வந்து பாயும்

வெள்ளமாய் - விடாய் எடுத்த

நாவிற்கு வார்த்துவிட்ட நீராய்

பொசுங்கித் தீய்ந்த மனப்பெருங் 

காடு உடனே பூஞ்சோலையாகுதே!


வெப்பம் தட்பமாகி

கொண்டல் மேலும் 

தென்றல் கீழும்

குளுமையேற்ற - விழியில்

நதியில் ஏன் மொழியிலும்

பசுமை சேர்க்குதே!


மறந்து இறைவனை வாழும்

மனமும் வரண்ட பாலைதான்

வந்து பாயும் வெள்ள நீராய்

திருமறையை கொண்டுவிட்டால்

நெஞ்சும் பசுமைதான்.


ஈரல் கொண்ட பலர்

இகமிங்கு இருந்தாலும்

ஈரமென்னவோ இல்லாதுதான்

இருக்கிறதே! - ஈரம் வேண்டுமெனில்

இயற்கையை பார்ப்பீர்

இயற்கையின் வழியில்

இறைவனை தரிசிப்பீர்


நீர் கண்ட ஈசன்

கண்களால் அல்ல கருத்தியலால்

ஈசனின் நேசம் தேடுவோர்

மனிதனை போற்றுக!

2022.08.26

3.14 pm


with farhan Sacha



No comments:

Post a Comment