Monday, 4 July 2022

கிவுளக்கடையில்

 

பொய்கைமேல் போர்த்திய சல்வீனியப்

பசுங்கம்பளம் - பிடரி ரோமத்தினுள் 

புகுந்து பின்னங்கழுத்தை கூசச்செய்யும்

மென் பசுந் தென்றல்


காணும் விழிகளில் பெரும்விருட்சங்களின்

நிழற்றரிசனம் - விண்ணெங்கும் 

வெண்முகில் முடிச்சுகள்

நிழலிறைக்க நிறைந்த விளாத்தி 




கண்டு இரசிக்க கவிதை எழுத

காகிதமும் நானும் 

வந்திறங்கிய ஊர் கிவுளக்கடையாம்

பெயர்சொன்னதும் பெய்து பூக்கிறது  

நெஞ்சில் நீர்மழை – மின்னிமறைகிறது

விழியில் நாவல்நிற சல்வீனிய மலர்


ஓடிமரமேறும் சாரை

ஒதுங்கிப்போகும் உடும்பு 

தூரநின்று அஞ்சிப்பார்த்த 

தாய்க்குலத் தாரகைகள்

பாம்பு பாம்பென பிதற்றிய

உளறல் மொழிகள் கேட்டு 

இரசித்தேன் நானிங்கு 


அள்ளிவீசும் அமுதக் காற்றில் 

பறந்து போய் வீழ்ந்தது இதயம்

சாலிஹ் மாமா வீட்டில் 

உடன் பிறந்தது கவிதை

நெஞ்சக் கூட்டில் - எழுதச்

சுரந்தது கற்பனை ஊற்றில் 

அதன் பாட்டில்


வளவைச் சூழ வண்ணத் தென்னை

வீட்டைச் கூழ விவசாயப் பண்ணை

காணும்போது கொள்ளை செய்யுதே கண்ணை


சுற்றத்தார் சூழ – நாம் 

சுற்றத்தான் வந்தோம் 

சுற்றித்தான் பார்க்கயிலே

நெற்றிக்குள் மிதக்கிறது 

முற்றிய மாங்காய் -

வெட்டிச்சீவி உப்பமிளகாய்தூவி

ஊறவிட்டு உண்டு 

சுவைத்தால் உள்ளக்களிப்புத்தானே!


மாமி ஆயிஷாவும்  மாமா அப்துல்கரீமும்

நடந்தார் குளக்கரையில் -இதைக்

கண்டோர் இதுவல்லோப் புதுத்தம்பதி

என்றே சிறுபொறாமை கொண்டார் நெஞ்சில்



முக்கனியில் முதலிரு கனித்தருவாம்

மாபலாவிருக்க மற்ற வழையைக் காணோம் 

சாலிஹ் மாமா உறவாகும் முன்னே 

அவர் மாமா கரீம் முசலி மண்ணோடு

முதுபழஞ் சொந்தமானார்



அறுசுவையமிழ்தாய் அன்னம் தண்ணீர்

அத்தோடு இன்னும்பல நறுங்கன்னல்

சாறாய் சாஹிரா மாமி உபசரிப்பில் 

உண்டு களித்தோம் 


மரவணிலிரண்டு ஒன்றோட

மற்றது துரத்தியோட – அதிலொன்றை 

நாய்துரத்தி வாயிற் கௌவ 

மச்சான்  ஷிப்லி கற்கொண்டதைக் காக்க

காத்தவணிலை கறியாக்க வால்பற்றினவேளை

அருகிருந்தவன் அடித்தான் தடியால்

அடியோடு பிடிதளர்த்தி அயல் மரத்திலேறியதணில்


உணவளித்து உபசரித்த மாமாவுக்கு 

நன்றிகள் மறவாது நவில்கிறேன்.


2022.06.04

3.17 பி.ப  


2 comments: