அன்னை பிதா வளர்ப்பில்
பிள்ளை அவன் செல்லமாய்
வெள்ளை மனதோடு வெள்ளாடை
நல்லாடை நேரத்தோடு சூடி
விடிகாலை நேரம் குதூகலமாய்
மூடித்திறக்கும் வாயில் மூடமுன்
ஓடிக்களைத்து வீதித்தரையில்
தூறிப்பாய்ந்து உள்ளே வருவான்!
நேரவிரயம் பாரதூரம்
நேரத்தில் வருவது அபாரசிரமம்
நேரத்தில் தூரமானாலும் வந்திடுவான்
நேரம்பிந்தி சில ஆசான்கள் வந்திடின்
என்னதான் செய்திடுவான்?? -மனம்
நொந்து எரிந்திடுவான்.
பாடநேரம் வருகையிலே
ஆழ அகலாம் விளக்கங்கள்
சொல்லி நெடுநாள் ஐயத்தை
போக்கிடும் ஆசான்களும் உண்டு
வெகு நேரம் பிந்தி வந்து
வெகு வேகமாய் சொல்லி
வெகு லாவகமாய் சமாளித்து
சுகபோகம் காணும் ஆசான்களுமுண்டு
பிள்ளைகளுக்கு தினம் தொல்லை
தரும் ஆசான் வில்லர்களும் உண்டு
பரிவாய் சொல்லி பிள்ளை மனங்களை
கனிவாய் கொள்ளை செய்வோருமுண்டு
சொல்பேச்சு கேளா சிறு
சாத்தான்களை திருத்த வேண்டும்
அதற்காய் அப்பாவி சிறாரை
ஏன் வருத்த வேண்டும்??
இவை கேட்டு ஆசான்களே
நீங்களேன் வருந்த வேண்டும்??
எம்பக்கம் பிழைகள் தாராளம்
செம்பக்கம் அயற்பக்கம் படிக்கையிலே
அடிக்கும் கும்மாளம் ஏராளம்
பின் அடிவாங்குவது சாதாரணம்
குறைகள் நூறு முறைகேடு
பலபோது கணக்கில் இருக்காது
துறைகள் நூறு துறையோடு
கரையேற பாடசாலையே
நீ ஓடமென வழிகோலு
ஆசான்களின்றி மாணவரேது
மாணவரின்றி பாடசாலையிராது
பாடசாலைல்லா ஊர் ஒரு
நாளேனும் உருப்படாது
No comments:
Post a Comment